மட்டு நகரை அழகுபடுத்தும் நோக்கோடு மரங்களை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்

2018-12-02

மட்டக்களப்பு மாநகரசபையின் நகரை அழகுபடுத்தல் செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும், மரம் நடுகை நிகழ்வானது இன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதற்கட்டமாக மட்டக்களப்பு - திருமலை வீதியை அழகுபடுத்தும் நோக்கில் 1000 மரங்களை நடும் வேலைத்திட்டமானது இன்று (01.12.2018) மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

யுனிசெப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இடம்பெற்றுவரும் இத் திட்டத்தினை மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி ஆணையாளர் நா.தனஞ்ஜெயன், மாநகரசபை உறுப்பினர்களான ரூபராஜ், அசோக் ஆகியோருடன் யுனிசெப் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், மாநகர சபையின் ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மரங்களை நட்டு ஆரம்பித்து வைத்தனர்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks