நிலைபேறான நீரியல் வள அபிவிருத்தி மாநாட்டில் கலந்துகொள்ள கௌரவ முதல்வர் நைரோபி பயணம்

2018-11-22

மட்டக்களப்பு மாநகர முதல்வர் கௌரவ தியாகராஜா சரவணபவன் அவர்கள் நைரோபி நகரில் இடம்பெறும் நிலைபேறான நீரியல் வள அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் சார்பாக கென்யாவிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

உலகமயமாதலின் காரணமாக நாடுகள் எதிர்நோக்கும் சூழலியல் பிரச்சனைகள் தொடர்பாகவும் அதன் ஊடாக வாவிகள் மற்றும் கடல் சார்ந்த நீர்நிலைகள் மாசடைவது தொடர்பாகவும் இங்கு ஆராயப்படவுள்ளது.

அதுமட்டுமன்றி நீர் நிலைகளை அண்டிய பிரதேச மக்களின் வாழ்வாதார, தொழில் விருத்திக்கான வழிவகைகள், சுற்றுலாத்துறை விருத்தி மற்றும் அதனூடான அபிவிருத்தி முன்னெடுப்புகள் என்பன பற்றியும் ஆராயப்படவுள்ளன.

184 நாடுகளில் இருந்து துறைசார் அறிவியலாளார்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், அரச தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என 4000 பங்குபற்றுநனர்கள் வரை கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கையின் சார்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் கௌரவ முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்கள் இவ் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு மாநகர சபையின் சார்பில் திட்டமிடப்பட்டுள்ள நகர அழகுபடுத்தல், வாவிகளின் தூய்மை பேணல், மக்களின் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்துவதற்காக முதலீட்டாளர்களை உள்வாங்குதல் என்பன போன்ற பல்வேறு முன்மொழிவுகளையும், திட்ட வரைபுகளையும் பற்றி 20 நிமிடங்கள் இம் மாநாட்டில் உரையாற்றவுமுள்ளார்.

Terms & Conditions
Batticaloa Municipal Council © All rights reserved
Developed by NSystemNetworks